கண்களின் இச்சையும், இன்டர்நெட்டும் !



இன்றைய நாட்களில் நம்முடைய கண்களுக்கு அதிக பளு (வேலை); காரணம்...நாம் காலை விழிக்கும் போதே செல்போனில் விழிக்கிறோம், தொடர்ந்து கம்ப்யூட்டர் , இன்டர்நெட்டில் நாள் முழுவதும் வேலை செய்கிறோம், மீண்டும் மாலை முதல் இரவு வரை டிவி பார்க்கிறோம். மேலும் தூங்க செல்லும் வரை மீண்டும்  செல்போன் ...இப்படி நாம் நாள் முழுவதும் கண்களை பயன்படுத்தி பல நவீன திரைகள்  வழியே பல  காட்சிகளை காண்கிறோம். நாம் சற்று சிந்திப்போம் ; இப்படி  நாம் காணும் அனைத்து காட்சிகளும் நம்முடைய வாழ்க்கைக்கு பிரயோஜனம் உள்ளதா அல்லது நம்மை கறைபடுத்தி நம்மை  நாமே அழித்துக்கொள்ள பயன்படுகிறதா ?

வேத வசனம் சொல்கிறது .... ( மத்தேயு 6 :22)

22. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!


இந்த வசனத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம் , நம்முடைய வாழ்கை வெளிச்சமாய் இருப்பதற்கும் அல்லது இருளாய் இருப்பதற்கும் நம்முடைய கண்களே காரணம்.

நீங்கள் கேட்கலாம் இருள் என்றால் என்ன என்று ?

இருள் என்பது ஒளியின் எதிர் பதம். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; (I யோவான்1 :5) என்று வேதம் தெளிவாக கூறுகிறது. அப்போது பிசாசும், அவனுடைய சேனைகளையும் மற்றும் அவனுடைய கிரியைகளுமே இருள் ஆகும்.

இந்த இருள் (பிசாசு) எப்படி நம் கண்களின் வழியே நம்மில் நுழைகிறான் ? 

வேதம் சொல்கிறது "மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்." (1 யோவான் 2 : 16). இந்த கண்களின் இச்சை மூலமே அவன் நம்மில் நுழைகிறான் . அசுத்தமான, இச்சையான காட்சிகளை நம் கண்கள் காணும்படி செய்து, அந்த காட்சிகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி, பாவ இச்சையான சிந்தனைகளை தூண்டி நம்மை இருளான வாழ்க்கைக்கு தள்ளி அங்கேயே நம்மை கிடத்திவிடுகிறான். இந்த கண்களின் இச்சைக்கு சமீபகாலமாக அவனும் அவனுடைய சேனைகளும் இன்டர்நெட்டையும் , செல்போனையும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இன்று இந்த இச்சையான காட்சிகள் மிகவும் எளிதாக நம்முடைய செல்போன் அல்லது கம்யூட்டர் வழியே நம்முடைய வீட்டிற்க்கே வந்துவிடுகிறது. இந்த இச்சையான காட்சிகளை பார்த்து, அதிலே மூழ்கி, இன்று அநேக இளைஞர்கள் அடிமைப்பட்டு இன்று இருளிலே கிடக்கிறார்கள். இதிலே வேதனையான காரியம் என்னவென்றால் இது அடிமைத்தனம் என்று அறியாமல் இன்னும் அநேக வாலிபர் இதிலே மூழ்கி கிடக்கிறார்கள். ஒரு நாள் அவர்கள் நினைத்தாலும், விரும்பினாலும் இந்த இச்சையான பழக்கத்தில் இருந்து அவர்களால் வெளியே வர முடிவதில்லை. இதன் முடிவு தோல்வியான வாழ்க்கையும், மரணமுமே.இதைத்தான் பிசாசு விரும்புகிறான். இதற்காகவே அவன் நம் கண்களின் இச்சையின் மூலம் நமக்குள் நுழைகிறான்.

இந்த இச்சையில் இருந்து விடுதலை சாத்தியமா ?

கண்டிப்பாக சாத்தியமே. தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. ஆனால் முதலில் நம்முடைய சுய முயற்சியால் அல்லது சுய பெலத்தால் இதில் இருந்து வெளியே வர முடியாது என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தேவனால் மாத்திரமே நம்மை விடுதலை செய்யமுடியும், இயேசு என்ற பெயருக்கு விடுவிப்பவர் (இரட்சகர்) என்று பொருள். அவர் நம்மை விடுவிக்க நாம் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ந்த இச்சையான பழக்கத்தில் இருந்து விடுபட போராடுபவர்களுக்கு  செய்ய வேண்டிய காரியங்கள்  - சில உதவி குறிப்புக்கள்  

1. நம் சுய முயற்சியினால் விடுதலை பெற முடியாது என்று உணரவேண்டும்.
2. நம்முடைய பாவத்தை அறிக்கை செய்து, இயேசு எனக்காக மரித்தார் என்று விசுவாசித்து (நம்பி)  மனம்திருந்தி அவரை ஏற்று கொள்ள வேண்டும்.
3. தேவனிடம் உதவி கேட்டு ஜெபம் செய்யவேண்டும்.குற்ற உணர்ச்சி இருந்தாலும் தினமும் வேதம் வாசித்து ஜெபிக்க வேண்டும்.தேவனை துதிப்பதும் ஆராதிப்பதும் மிக அவசியம்.
4. மீண்டும் மீண்டும் அதே பாவத்தில் நாம் விழும் போது சோர்ந்து போக கூடாது. மறுபடியும் அறிக்கை செய்து தேவனோடு ஒப்புரவு செய்துகொள்ள வேண்டும். பிசாசு நம்மை எளிதாக விட மாட்டான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
5. தேவன் நம்மை விடுவிப்பார் என்று விசுவாச வார்த்தைகளை, வேத வசனங்களை அறிக்கை செய்ய வேண்டும்.
6. மிக முக்கியமாக வாரம் ஒரு முறை அல்லது முடிந்தால் இரு முறை உபவாசம் இருந்து இதற்காக ஜெபிக்க வேண்டும். உபவாசம் மாம்சத்திற்கு எதிரான மிக பெரிய ஆயுதம். (இந்த காரியத்தை செய்யும் முன்  மருத்துவரீதியாக உங்கள் உடல் இதற்கு ஒத்துழைக்குமா என்பதை அறிந்துகொள்ளுங்கள் )


இந்த காரியங்களை தொடர்ந்து நாம் செய்து தேவனோடு நெருங்கும்போது பிசாசு தானாகவே  நம்மை விட்டு ஓடிப்போவான்.

சோர்ந்துபோகாமல் இருங்கள் தேவன் நம்மோடு இருக்கிறார். கண்டிப்பாக விடுதலை அளிப்பார்.


(இந்த தொகுப்பு கிறிஸ்தவர்களுக்காக, இயேசுவை பின்பற்றுபவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது.)




Post a Comment

Previous Post Next Post