நாம் பல நேரங்களில், தொடர்ந்து கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது சோர்ந்து போகிறோம். நமக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது, நான் என்ன பாவம் செய்தேன் ? என்று சிந்திக்கிறோம். சிலருக்கு வேலை இல்லை, சிலருக்கு கடன் பிரச்சனை , சிலருக்கு குடும்ப பிரச்சனை, சிலர் தவறான பழக்கங்களை பழகி விட முடியாமல் தவிக்கிறோம் இப்படி நமக்கு அன்றாடம் பல போராட்டங்கள் .....கர்த்தரை தேடுகிற, நம்பிருக்கிற நமக்கு ஏன் இப்படி ஒரு சோதனை என்று எண்ணங்கள்.
இப்படி கடினமான சூழ்நிலைகளில் நான் கற்று கொண்ட சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
கர்த்தர் எல்லா நேரங்களிலும் அற்புதம் செய்து நம்மை கஷ்டங்களில் இருந்து விடுதலை செய்வது இல்லை மாறாக அந்த கஷ்டங்களில் நம்மோடு இருந்து நமக்கு பெலன் தந்து அதை கடந்து போக கற்றுத்தருகிறார், அதோடு ஆவியானவர் அந்த கஷ்டங்களில் இருந்து நம்மை பக்குவப்படுத்துகிறார் என்பதே .
நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான் .....
"கர்த்தர் நம்மோடு இருக்கிறார் " என்பதைத்தான். எல்லா நேரங்களிலும் அவர் நம்மோடு இருக்கிறார்.
தாவீது சொல்வதை பாருங்கள் .....
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4
கர்த்தரால் அபிஷேகம் பெற்ற மனிதன் தாவீது சந்தித்த கஷ்டங்களை பாருங்கள்.....தப்பிஓடுகிறார், மறைந்து வாழ்கிறார் , மனைவி பிள்ளைகளை எதிரிகள் பிடித்து செல்கின்றனர் , பெற்ற மகனே கொல்ல தேடுகிறான் ....இப்படி பல, ஆனாலும் கர்த்தர் தாவீதோடு கூட இருந்து அவனை விடுவிக்கிறார் . கஷ்டமான நேரங்களில் தாவீது செய்தது என்ன ... வாசித்து பாருங்கள்
I சாமுவேல் 30:6. தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
நாமமும் இந்த கஷ்ட சூழ்நிலைகளில் செய்ய வேண்டியது இதுவே. கர்த்தருக்குள் நம்மை பெலப்படுத்தி கொள்ள வேண்டும். நினைத்து பாருங்கள் இந்த வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் நம்மோடு இருக்கிறார் இந்த கஷ்டங்கள் எம்மாத்திரம் !
ஏசு இந்த உலகில் வந்த போதும், உயிர்ரோடு எழுத்து விண்ணுலகம் சென்ற போதும் மனிதர்களாகிய நமக்கு கொடுக்கப்பட்ட செய்தி ...
மத்தேயு 1 : 23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
அதே போல்
மத்தேயு 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி ! தேவன் நம்மோடு இருக்கிறார்.