சோம்பல்



இன்று விசுவாசிகளாகிய நாம் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், உலக வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் சோம்பல். இந்த சோம்பல் என்ற பண்பு விசுவாசிகளிடத்தில் இருக்க கூடாத ஒன்று. இந்த சோம்பலினால் தேவனிடத்தில் இருந்து  அநேக ஆசிர்வாதங்களை பெற்று கொள்ள முடியாமல் இருக்கிறோம்.

வேதம் சொல்கிறது "சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;(நீதிமொழிகள் 13: 4)" 

2 வகையான சோம்பல்....

1. ஒரு வேலையும் செய்ய மனமில்லாமல், ஒன்றும் செய்யாமல் பொழுதை கழிப்பது.
2. செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல், தேவையற்ற வேலை செய்து பொழுதை கழிப்பது.

இந்த 2 வகையில், நாம் எந்த வகையானாலும் நாம் சோம்பேறிதான். இந்த சோம்பலினால் இன்று நாம் பல இடங்களில் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறோம். சில போதகர்களின் சோம்பேறித்தனத்தால் பல சபைகள் வளராமல் இருக்கின்றன. சில சுவிஷேசர்களின் சோம்பேறித்தனத்தால் பல இடங்களில் தேவனுடைய வார்த்தை செல்லாமல் இருக்கிறது.இதே சோம்பேறித்தனத்தால்தான் நாம் அதிகாலையில் எழுந்து தேவனை தேடி வரங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.

இந்த சோம்பலினால் வரும் மற்றொரு கொடிய விஷயம் வறுமை....

வேதம் சொல்கிறது .....

நீதிமொழிகள் 6 : 6 - 11

6. சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

7. அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,

8. கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

9. சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

10. இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

11. உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.

நீதிமொழிகள் 10 : 4

4. சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்


இன்று தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மில் அநேகர் வறுமையில் இருப்பதற்கு தேவன் காரணம் அல்ல நம்முடைய சோம்பேறித்தனமே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள இந்த வசனங்கள் உதவுகின்றன.


சோம்பேறித்தனம் ஒரு பாவம் 

எசேக்கியேல் 16 : 9

49. இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; 

நிர்விசாரமான சாங்கோபாங்கம் என்பது சோம்பேறித்தனதையே குறிக்கிறது என்று பல ஆங்கில வேத மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுகின்றன. இந்த பாவம் நம் ஆவிக்குரிய வாழ்க்கையையும், உலக வாழ்க்கையையும் கறைபடுத்திவிடுகிறது  எந்த ஒரு பாவத்தையும் போல  இந்த பாவத்தையும் நாம் அறிக்கை செய்து விட்டு விட வேண்டும்.


சோம்பேறித்தனத்தில் இருந்து விடுதலை பெற .....

சோம்பேறித்தனம் ஒரு மாம்சிக பாவம், நாம் நம்முடைய மாம்சத்தை ஏசுவோடுகூட சிலுவையில் அறைந்து விட்டோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவரோடு கூட உயிரோடு எழுந்த நாம் இப்போது  ஆவியில் புதிய மனிதர்களாய் இருக்கிறோம். இந்த உண்மையை நாம் ஆவியில்  உணர்ந்து கொள்ளும் பொழுது நாம் ஆவியில் பெலப்பட்டு மாம்சத்தின் செய்கைகளில் இருந்து விடுதலை பெறுவோம்.

வேதம் கூறுகிறது .....

"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் ( மத்தேயு 26 : 41)"

நாம் தொடர்ந்து ஜெபிக்கும் போது தேவன் நமக்கு வெளிப்பாடுகளை கொடுத்து நம்மை இந்த மாம்சிக காரியங்களில் இருந்து விடுதலையாக்குவார். ஆமென்.

Post a Comment

Previous Post Next Post